தமிழர்களின் பிரச்சினைக்கு சேர் பொன் இராமநாதன் முதல் சம்பந்தன் வரையான தமிழ்த் தலைவர்களே காரணம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.
மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் அமைக்கப்பட்ட, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகத்தை இன்று காலை 9 மணியளவில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் பேர் வீரர்கள் தின உரை தமிழர்களை பாதிக்காது!
சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாக இருந்தால் எந்த நாடுகளாக இருந்தாலும் ஜனாதிபதி அதில் இருந்து ஒதுங்குவதாகவே அண்மையில் கூறி இருந்தார். ஜனாதிபதி தன்னுடைய கருத்தை கூறி இருந்தார். குறித்த கருத்து தமிழ் மக்களை எந்த வகையிலும் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை.
தமிழர்களின் பிரச்சினைக்கு சேர் பொன் இராமநாதன் முதல் சம்பந்தன் வரையான தலைவர்களே காரணம்!
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த கால தமிழ் தலைமைகள் தான் காரணமாக உள்ளனர் என நான் நம்புகின்றேன். சேர் பொன் இராமநாதன் முதல் சம்மந்தன் வரை அதற்கு இடைப்பட்ட எல்லோரும் அவர்கள் பிரச்சினைகளை சரியான முறையில் அணுகவில்லை என்பதே எனது அனுபவம்.
சுமார் 15 வருடங்களுக்கு மேல் ஆயுதப்போராட்டத்தின் முன் அனுபவம், சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஜனநாயக வழி முறையிலான அனுபவங்கள் இருக்கின்றது. இந்த அனுபவங்களின் ஊடாகவே நான் கூறுகின்றேன்.
சேர் பொன் ராமநாதன் முதல் சம்மந்தன் வரை இருக்கக்கூடிய, இருந்த தமிழ் தலைமைகள் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக கொண்டு சென்றுள்ளனர். நாங்கள் சரியான முறையில் அணுகவில்லை. ஜனாதிபதி கூறிய விடயம் தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை என தெரிவித்தார்.
மேலும் இதுவரை இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பாகவும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது,
கொரோனா பிரச்சினை காரணமாக வெளியில் இருந்து செல்வோருக்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மாத கடைசியில் இந்தியாவில் இருந்து விசேட கப்பல் ஒன்று இலங்கைக்கு வர உள்ளது.
அதில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்து அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இலங்கை மீனவர்களையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இரா சம்பந்தன், இலங்கை, மன்னார்